Blogger news

adharva school

திங்கள், 16 செப்டம்பர், 2013

ஜாலியா சிரிக்கலாமே

 ஜாலியா சிரிக்கலாமே 


வாடிக்கையாளர் : மெதுவடைக்கும், வடைகறிக்கும் என்னப்பா வித்தியாசம்? 
சர்வர் : ஒரு நாள் வித்தியாசம் தான் சார்.
 
 
அதென்னப்பா, ‘தங்க’ சாம்பார்... 
வாடிக்கையாளர் : போர்டுல எழுதியிருக்கே கோல்டு சாம்பார்... அது என்னப்பா? 
சர்வர் : அதுவா சார், சாம்பார்ல 24 கேரட் போட்டு தயார் பண்ணிருக்கோம்...
 
 
 
அப்பா : ஏண்டா... உன் நோட்டுல வீட்டு மளிகைகணக்கு, லாண்டரி கணக்கு எல்லாம் எழுதி வச்சுருக்க...?   
 மகன் : எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.
ஆசிரியர் : நீ எதிர்காலத்துல என்னவாக ஆசைப் படுற... 
மாணவன் : டாக்டர் இல்லாட்டி பைலட் ஆகணும் சார்... 
ஆசிரியர் : எப்படியோ மக்கள மேல அனுப்பிடணும்கறதுல உறுதியா இருக்க...
 

மாயப் பாட்டியின் முத்துமாலை-எகிப்திய கதைகள்

நெடுங்காலத்துக்கு முன் எகிப்தில் ஷகானா என்னும் இளவரசி இருந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழிகளுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள நீரூற்றில் குளிக்கச் சென்றாள்.குளித்து முடித்துவிட்டு ஷகானா கரையேறினாள். அப்போது ஒரு பாட்டி நீரூற்றின் கரையில் நின்றுகொண்டு இருந்தாள்.
 
'ஏய் கிழவி, உனக்கு இங்கே என்ன வேலை? இது எங்களைப் போன்ற அழகான இளவரசிகள் குளிப்பதற்கான இடம். சீக்கிரம் இங்கே இருந்து போய்விடு'' என்று இளவரசி கோபத்துடன் சொன்னாள்.அதைக் கேட்டு அந்தப் பாட்டி சிரித்தவாறு அருகே வந்தாள். 'அழகான இளவரசியே, இப்போது இருப்பதைவிட நீ இன்னும் அழகாக ஆக வேண்டுமா? அப்படி என்றால் இந்த மந்திர முத்துமாலையை அணிந்துகொள்'' என்று ஷகானாவிடம் ஒரு முத்துமாலையைக் கொடுத்தாள்.
 
'இவ்வளவு அழகான முத்துமாலையை நான் இதுவரை பார்த்ததே இல்லை'' என்று சொன்ன ஷகானா, அதைக் கழுத்தில் அணிந்துகொண்டாள்.
 
அடுத்த நொடி ஷகானாவின் கையும் காலும் குறுகிச் சுருங்கின. அவள் மிகவும் வயதான முதியவள் ஆகிவிட்டாள். இந்தக் காட்சியைக் கண்ட இளவரசியின் தோழிகள் பொங்கி அழுதார்கள். அவர்கள்  இளவரசியை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
 
விவரம் அறிந்த ராஜா கோபமானார். 'என் மகளை ஏமாற்றி இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்தக் கிழவியைச் சீக்கிரம் பிடித்து சிறையில் அடையுங்கள்'' என்று கட்டளையிட்டார்.பாட்டியைப் பிடிப்பதற்காகத் தளபதி சில வீரர்களுடன் நீரூற்றுக்கு வந்தான். அப்போது அந்தப் பாட்டி மெதுவாக வானில் பறந்து செல்வதைப் பார்த்தான்.
 
ராஜாவிடம் விரைந்து சென்ற தளபதி 'ராஜாவே, அந்தக் கிழவி ஏதோ பெரிய சூனியக்காரிபோல இருக்கிறது. அவளைப் பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல'' என்றான்.'அந்தச் சூனியக்காரியைக் கண்டுபிடித்து என் மகளை முன்பு இருந்ததுபோல மாற்றுபவர்களுக்கு நான் ஆயிரம் தங்க நாணயங்கள் தருவதாக விளம்பரம் செய்யுங்கள்'' என்றார் ராஜா.
 
அப்படியே விளம்பரம் செய்யப்பட்டது. செய்தி அறிந்த பலரும் அந்தச் சூனியக்காரியைத் தேடி அலைந்தார்கள். ஆனால், எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் வெளிநாட்டில் வசிக்கும் ஷாகித் என்ற இளைஞன் அந்தத் தகவலை அறிந்தான். ஷாகித் அன்றே சூனியக்காரியைத் தேடிப் புறப்பட்டான்.  அவனுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. அவன் நீரூற்றை நெருங்கியபோது பாட்டி அங்கே இருப்பதைப் பார்த்தான் பாட்டி ஒரு பாறையில் சாய்ந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். பக்கத்தில் இருந்த மூட்டையில் முத்துமாலையும் இருந்தது.
 
இப்படிப்பட்ட ஒரு முத்துமாலைதான் இளவரசியைக் கிழவியாக மாற்றி இருக்கும். நான் இந்த மாலையை அணிந்து ஒரு கிழவன் ஆகிறேன் என்று நினைத்தான் ஷாகித். நொடிப் பொழுதில் அந்த மாலையை எடுத்து அணிந்துகொண்டு கிழவன் ஆகிவிட்டான்.
அப்போது பாட்டி கண் விழித்தாள். முத்துமாலையையும் இளைஞனையும் பார்த்து 'நீ ஏன் இந்த மாலை அணிந்து கிழவன் ஆனாய்?'' என்று கேட்டாள்.
 
ஷாகித் தந்திரமாகப் பேசினான் 'மன்னிக்க வேண்டும். நான் ஒரு ஏழை. எனக்கென்று யாரும் இல்லை. எனவே மிகவும் சீக்கிரம் இறந்துவிட விரும்புகிறேன். கிழவன் ஆகிவிட்டால் சீக்கிரம் இறந்துவிடலாம் என்று முத்துமாலையை அணிந்துகொண்டேன். ஆனால் இப்போது நான் செய்தது தவறு என்று புரிகிறது'' என்று சொல்லி போலியாக அழுதான்.
 
பாட்டிக்கு அவன் மீது இரக்கம் ஏற்பட்டது. 'தம்பி வருத்தப்படாதே. உனக்கு நான் உதவி செய்கிறேன்'' என்று சொல்லி வேறு ஒரு முத்துமாலையைக் கொடுத்தாள். அவன் அதை அணிந்ததும் முன்பு இருந்ததுபோன்று இளைஞனாக மாறினான். பிறகு பாட்டிக்கு நன்றி சொல்லி புறப்பட முற்பட்டான்.
 
அப்போது பாட்டி 'நீ இப்போது எங்கே செல்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், இளவரசியின் கழுத்தில் இந்த முத்துமாலையை அணிவிப்பதற்கு முன்பு அவளுக்குச் சாட்டையால் பத்து அடி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவள் பழைய உருவத்தைப் பெறுவாள்'' என்றாள்.
 
அரண்மனையை அடைந்த ஷாகித் 'ராஜாவே, எனக்கு அனுமதி கொடுங்கள். உங்கள் மகளை முன்பு இருந்தது போன்று அழகி ஆக்குகிறேன்'' என்று ராஜாவிடம் சொன்னான்.ராஜா உடனடியாக அவனைத் தன் மகளிடம் அழைத்துச் சென்றான். ஷாகித் தன் கையில் இருந்த சாட்டையால் இளவரசியை அடிக்கத் தொடங்கினான். பாவம் இளவரசி! வேதனை தாளாமல் துடித்தாள்.
 
மகள் படும் துன்பத்தைப் பார்த்து மனம் கலங்கிக் கண்ணீர் வடித்தார் ராஜா. அடிபட்ட இளவரசி மயங்கி விழுந்தாள். அந்த நேரத்தில் ஷாகித், பாட்டி கொடுத்த முத்துமாலையை இளவரசியின் கழுத்தில் அணிவித்தான். அடுத்த நொடியே அவள் பேரழகியாக எழுந்தாள்.
 
ராஜா மகிழ்ந்தார். 'இளைஞனே, நீ அந்த சூனியக்காரியையும் பிடித்துக்கொண்டு வந்தால்  உனக்கு ஆயிரம் தங்க நாணயங்கள் பரிசளிக்கிறேன்'' என்றார்.அப்போது இளவரசி முன்னால் வந்து 'வேண்டாம் அப்பா. என் ஆணவப் பேச்சுதான் ஆபத்தில் சிக்க வைத்தது. அந்தப் பாட்டிக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம். என்னைக் காப்பாற்றிய இவருக்கு உடனே பரிசு கொடுக்க வேண்டும். அதோடு, இவரையே நான் திருமணம் செய்துகொள்ளவும்  விரும்புகிறேன்'' என்று சொன்னாள்.
 
அவள் விருப்பத்துக்கு ராஜாவும் சம்மதம் தெரிவித்தார். ஷகானா மற்றும் ஷாகித்தின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.